பழங்குடியினர் சான்றிதழ் வழங்கக்கோரி கடம்பூர் மலைகிராம வாழ் மக்கள் போராட்டம்! 

பழங்குடியினர் சான்றிதழ் வழங்கக்கோரி கடம்பூர் மலைகிராம வாழ் மக்கள் போராட்டம்! 

கடம்பூரில் பழங்குடியின சான்றிதழ் வழங்க கோரி மலைக்கிராம மக்கள் இரவிலும் விடிய விடிய தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மலையாளி இன மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்களுக்கு  வருவாய்த்துறை சார்பில், இதர வகுப்பினர் (ஓ.சி.) என சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஆனால், தங்களுக்கு 'பட்டியலின பழங்குடியினர்' (எஸ்.டி.) என சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். சமீபத்தில், பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு குழந்தைகள் அனைவரும் பள்ளி சென்று வரும் நிலையில், கடம்பூர் மலைப்பகுதிகளில் வாழும் மக்கள், தங்களுக்கு 'பட்டியலின பழங்குடியினர்' (எஸ்.டி.) என சான்றிதழ் வழங்க வேண்டும் என , கடந்த சில நாட்களாகவே தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியை புறக்கணித்து வீட்டிலேயே வைத்திருந்துள்ளனர்.

இந்த நிலையில் கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மலையாளி பழங்குடியின மக்கள் ஒன்று திரண்டு நேற்று கடம்பூருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்த பஸ் நிலையம் அருகே மலைவாழ் எஸ்.டி. மலையாளி மக்கள் நலச்சங்கத்துடன் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், பள்ளி மாணவ மாணவிகளும், பங்கேற்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மலையாளி இன மக்கள் கடம்பூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கல்கடம்பூரில் உள்ள சத்தியமங்கலம் - கடம்பூர் சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதன் பின்னரே, இது குறித்து தகவல் கிடைத்து கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், மழையும் தீவிரமாக பெய்தது. ஆனால் கொட்டும் மழையிலும், சாலை மறியல் போராட்டத்தை மக்கள் கைவிடவில்லை.

பின்னர் இரவு 8.30 மணிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  ஜவகர் கடம்பூருக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதற்கும் பலனில்லாமல் போனது. 

இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'மாவட்ட கலெக்டர் இதுதொடர்பாக நேரில் வந்து எங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்,' என்றனர்.

பின்னர் இரவு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விரைவில் ஒரு தீர்மானம் செய்யப்படும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

இதையும் படிக்க: தனியார் தொழிற்சாலையிடம் மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபட்ட திமுக நகர செயலாளர்!