நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர்... சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்...

தனது 16 ஏக்கர் நிலத்தை அபகரித்த பா.ஜ.க பிரமுகர் மீது புகார் அளிக்க வந்த நபர், சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகர்... சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்...
சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் வெங்கட் நாராயணன். இவர் தனக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம் வயலாநல்லூர் கிராமத்தில் உள்ள 16 ஏக்கர் நிலத்தை விற்பதற்கான உரிமத்தை பா.ஜ.க பிரமுகர் ரமணன் மற்றும் அவரின் நண்பர் சதீஷ் குமாருக்கு  வழங்கியுள்ளார் என கூறப்படுகிறது.
 
நிலத்தை விற்பனை செய்து தருவதாக கூறியவர்கள் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வது வெங்கட் நாராயணன் மற்றும் அவரது மனைவிக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 6 ஆம் தேதியன்று வெங்கட் நாராயணன் குடும்பத்துடன் வந்து வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவில்  புகார் அளித்துள்ளார். மேலும் மேலும் பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தில் விற்பனை உரிமத்தை ரத்து செய்த தடங்கல் மனுவையும் நேற்றைய தினம் அளித்துள்ளார்.

 
இதனை அறிந்த ரமணன் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கட் நாராயணன் வீடு புகுந்து அவரது மனைவி மற்றும் குழந்தையை கத்தி முனையில் மிரட்டி வெங்கட் நாராயணனை வலுக்கட்டாயமாக பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகம் அழைத்துச் சென்று மாலை 6 மணிக்கு மேல், 16 ஏக்கர் நிலத்தை வேறொரு பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் மனமுடைந்த வெங்கட் நாராயணன் இன்று காலை சென்னை வேப்பேரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். இதனையடுத்து பாதுகாப்புப் பணியில் அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து மீட்டதோடு உடனடியாக அபரை வேப்பேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் புகார் அளிக்க வந்த வெங்கட் நாராயணன் மனைவி நித்யாவிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.