தமிழக அரசின் அசத்தல் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராம பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழக அரசின் அசத்தல் திட்டம்: இன்று  தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

தமிழகத்தில் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் மாதம் தோறும் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகின்றனர். அதேபோல் சிறுநீரக செயலிழப்பால் ஏராளமானோர் வாரத்துக்கு ஒன்றிரண்டு முறை டயாலிசிஸ் செய்து கொள்ளும் நிலையில் இருக்கின்றனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர்.

இந்த மாதிரி நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வீடு வீடாக சென்று மாதந்தோறும் தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவது, டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கையடக்க கருவிகளுடன் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில், மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.  இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் நேற்று ஓசூர் சென்றார். இன்று காலை 9.30 மணிக்கு சூளகிரி கிராமத்தில் நடைபெறும் விழாவில் இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். 

விழாவையொட்டி சில வீடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மருந்து மாத்திரைகள் வழங்குகிறார். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதையும் அவர் பார்வையிடுகிறார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து காரில் ஓசூர் விமான நிலையம் செல்கிறார். காலை 11 மணிக்கு ஓசூரில் இருந்து சென்னை புறப்படுகிறார். முதலமைச்சர்  வருகையையொட்டி ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.