"அரிசி, பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்துக" ராமதாஸ் வலியுறுத்தல்!
அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்களின் விலை உயர்வை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சாதாரண பொன்னி அரிசி விலை கிலோ 35 ரூபாயிலிருந்து ரூ.41 ஆகவும், நடுத்தர வகை பொன்னி அரிசி விலை 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி விலை ரூ.12 உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும். அதேபோல், கடந்த வாரம் ரூ.118 ஆக இருந்த ஒரு கிலோ துவரம்பருப்பு விலை இப்போது ரூ.42 உயர்ந்து ரூ.160 ஆக அதிகரித்திருக்கிறது. இது 36% உயர்வு ஆகும். இது வரலாறு காணாத ஒன்றாகும். பிற பருப்பு வகைகளின் விலைகளும், மளிகைப் பொருட்களின் விலைகளும் 8% முதல் 20% வரை உயர்ந்திருக்கின்றன. சென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்" எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நெல் விளைச்சல் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருக்கும் போதிலும், அரிசி விலை உயர்ந்து கொண்டே செல்வதற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ள அவர் தமிழகத்தில் விளைவிக்கப்படும் நெல் பெரும்பாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதுடன், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் உண்ணும் பொன்னி அரிசி பெரும்பாலும் ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து தான் கொண்டு வரப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர் இது தான் விலை உயர்வுக்கு காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தமிழக மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளவதாக தெரிவித்துள்ள அவர் இதைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!