இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.....போலீசார் தீவிர விசாரணை....

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.....போலீசார் தீவிர விசாரணை....

மப்பேடு அருகேயுள்ள நரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. பட்டியலின சமூகத்தை சேர்ந்த இவர் அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த இளவரசன் என்பவரை சுமார் ஒன்றரை ஆண்டுகாலமாக  காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் காதலுக்கு இளவரசன் வீட்டில் எதிர்ப்பு இருந்து  வந்த நிலையில் , ஜெயஸ்ரீ அங்குள்ள தனியார் தொழிற்சாலைக்கு  வழக்கம் போல் பணிக்கு சென்றதாக தெரிகிறது.

வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த  உறவினர்கள், தேடிச் சென்ற போது, ஏரிக்கரை அருகேயுள்ள கருவேல மரத்தில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதனை கண்டு அவரது தாயார் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.

இதை தொடர்ந்து  காதலனை கைது செய்ய கோரி இளம்பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. முன்னதாக  சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என கருதப்படுகிறது..