தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது... அ.தி.மு.க.  தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்...

அதிமுக தேர்தலில் தேர்வான நிர்வாகிகளை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது... அ.தி.மு.க.  தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்...

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு கடந்த 7ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் கட்சி விதிப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் 21 நாட்கள் அவகாசம் வழங்காமல் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், ஒரு கோடியே 50 லட்சம்  உறுப்பினர்கள் உள்ள அதிமுகவில், தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் வெளியிடவில்லை என மனுவில் கூறப்பட்டது. எனவே இருவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என  கோரப்பட்டது. 

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, உள்கட்சி தேர்தலில்  எந்த பங்கும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தை வழக்கில் சேர்த்ததால் அது விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என்.ஜி ஆர். பிரசாத்,  ஜனநாயகம் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என கூறினார். வாக்குரிமை என்பது அரசியல் சட்ட உரிமை என்றும் தெரிவித்தார். அரசியல் சாசனத்தின் ஜனநாயக உரிமையை மீறி செயல்படும்போது அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என பிசிசிஐ வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரசாத் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் உட்கட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தை இணைத்துள்ளது உகந்ததா என்பது குறித்தான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் இன்று நடைபெற்றது. அப்போது உட்கட்சி தேர்தலில் தலையிட்டு கண்காணிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என கருத்து கூறிய நீதிபதிகள், வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.