தி.மு.க. எதிர்க்கும் அளவுக்கு பெரிய ஆளாகி இருக்கின்றோம் - சீமான்

தி.மு.க. எதிர்க்கும் அளவிற்கு நாங்கள் பெரிய ஆளாகி இருக்கின்றோம் என நாம்தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. எதிர்க்கும் அளவுக்கு பெரிய ஆளாகி இருக்கின்றோம் - சீமான்

சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர்  கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு குவிந்த நிலையில், அதே பகுதிக்கு  திமுகவினரும் வந்தனர். திமுக குறித்தும், முதல்வர் குறித்தும் சீமான் இழிவாகப் பேசினால் எதிர்ப்பு தெரிவிப்போம் என கூறி திமுகவினர் அதே பகுதியில் நின்ற நிலையில் அவர்களை அப்புறப்படுத்த காவல் துறையினர் முயன்றனர்.

அப்போது திமுகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது சீமானுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய திமுகவினரை  காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால்  போலீசாருக்கும் திமுகவினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் திமுகவினர் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே ஆர்ப்பாட்டம் நடைபெறும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு  சீமான் பேட்டியளித்தார். அப்போது சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுவிக்க கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம். 10 ஆண்டுகளுக்கு  மேலாக சிறையில் இருக்கும்  கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால் ராஜிவ் கொலை, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க மறுக்கின்றனர் என குற்றம்சாட்டினார்.

இஸ்லாமியர் என மதத்தை பார்க்காமல் மனிதம் பார்க்க வேண்டும். அண்ணா பிறந்தநாளில் 700 சிறைகைதிகளில் ஒருவர் கூட இஸ்லமியர் இல்லை எனக்கூறிய அவர்,மதவாதத்திற்கு எதிரானவர்கள் என பேசி, இடதுசாரி, முற்போற்கு என பேசிவிட்டு  இஸ்லாமியர்களை  விடுவிக்காமல் இந்த அரசு இருக்கின்றது. இது குறித்து குழு அமைக்க போவதாக தமிழக அரசு சொல்கின்றது. மக்களின் உணர்வு என்பது விடுதலைதான், இதில் குழு என்பது தேவையற்றது.

மதத்தை பார்க்காமல் மனிதம் பார்க்க வேண்டும், தேர்தலின் போது 7 தமிழர் விடுதலை பேசுகின்றனர். இப்போது விடுவிக்க மறுக்கின்றனர் என தெரிவித்த அவர் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வாய்ப்பு தாருங்கள் என கேட்டதாலேயே இஸ்லாமியர்கள் திமுகவிற்கு வாக்கு செலுத்தினர் எனவும் தெரிவித்தார். மனிதநேய அடிப்படையில், கருணை  அடிப்படையில் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த அவர், 

திமுகவினர் நாம்தமிழர் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து  போராடுவதில் பெருமைதான். அந்த அளவிற்கு பெரிய ஆளாகி இருக்கின்றோம் என்றார்.  தரக்குறைவு பேச்சு என்பதை திமுக பேசக்கூடாது.  அரசுக்கு எதிராக பேசக்கூடாது என்பது நல்ல ஜனநாயகம் அல்ல. பா.ஜ.கவே இதைத்தான் செய்கின்றது, திமுகவும் அதையே திமுகவும் செய்கின்றது. அரசுக்கு எதிராக பேச வேண்டும் என்பது மனநோய் அல்ல, அரசு சரியா இருந்தால் யாரும்  பேசப்போவதல்லை என்று சீமான் தெரிவித்தார்.