”வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே மகளிர் உரிமை மாநாடு” - அண்ணாமலை

முதலமைச்சரின் துறையான காவல்துறை மகளிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், வெறும் விளம்பரத்திற்காக மகளிர் உரிமை மாநாடு எனும் நாடகத்தை நடத்துவதால் என்ன பயன்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அகில இந்திய மகளிர் உரிமை மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் பங்கேற்றுள்ளனர். ஆனால், இந்த மாநாடு வெறும் விளம்பரத்திற்காக தான் என்றுக்கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்தாண்டு  டிசம்பர் 31 ஆம் தேதி திமுக எம்.பி., கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரை திமுகவை சேர்ந்தவர்கள் பாலியல் சீண்டல்கள் செய்த வழக்கில், பாஜகவின் அழுத்தம் காரணமாக பல நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க : "இந்தியாவில் பல பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" - கனிமொழி எம்.பி.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ள நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 13.10.2023 அன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், 12.10.2023 அன்று மாலை, கே.கே. நகர் வடக்கு திமுக பகுதி துணைச் செயலாளர் விஜயகுமார் எனும் நபர், விருகம்பாக்கம் காவல்நிலையத்திற்குள் புகுந்து,  பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா அனுப்பியதாகவும், நீதிமன்ற விசாரணையின் போது, குற்றவாளிகளுக்கு எதிராக எதுவும் கூறக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக,  விருகம்பாக்கம் காவல் ஆய்வாளரிடம்,  விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெண் காவலரை சமாதானமாக போகச் சொல்லுங்கள், வீணாக பிரச்சினைகள் வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவலரின் தொலைபேசி எண்ணையும் கேட்டுப் பெற்றுள்ளார் எனத் தெரிகிறது.

இப்படி பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தியையும் பிரியங்காவையும் அழைத்து, மகளிர் உரிமை மாநாடு என்ற நாடகத்தை திமுக ஒருபுறம் நடத்திக் கொண்டிருப்பதாகவும், காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கே இந்த நிலை என்றால், சாமானியப் பெண்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டுமா? என்றும் கூறியுள்ளார். அத்துடன், முதலமைச்சரின் துறையான காவல்துறை மகளிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், வெறும் விளம்பரத்திற்காக மட்டும் மகளிர் உரிமை மாநாடு எனும் நாடகத்தை நடத்துவதால் என்ன பயன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.