'தேவேந்திரகுல வேளாளர்' என்ற பெயரில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியீடு..

'தேவேந்திரகுல வேளாளர்' என்ற பெயரில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியீடு..

6 பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் ஆகிய சாதிப் பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திர வேளாளர் எனும் பொதுப் பெயரில் அழைக்கலாம் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை, ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத் துறை, சட்டத் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தமிழ்நாடு அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி அறிக்கை அளித்தது.

மத்திய அரசானது அதனை ஆய்வு செய்து உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது.அந்த சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் கடந்த ஏப்ரல் 13ம் தேதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டதால் நடைமுறைக்கு வந்தது.

அதனை மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சான்றிதழ் வழங்க அதிகாரம் பெற்ற அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது