வலுவிழந்தது மோக்கா புயல்..!
வடக்கு மியான்மா் பகுதியில் மிக அதி தீவிர புயலாக கரையை கடந்த மோக்கா புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகா்ந்து தீவிர புயலாக வலுவிழந்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவான மோக்கா புயல், வியாழக்கிழமை அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்தது. பின்னர், போர்ட் பிளேயரில் இருந்து 530 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல் வங்கதேசம் -மியான்மர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அப்போது, 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்க தேச கடற்கரை பகுதியில் மிக அதி தீவிர புயலாக கரையை கடந்தது. மோக்கா புயல் கரையை கடந்தபோது சுமார் 210 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இந்த அதிதீவிர புயல் வங்காளதேச- மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை பந்தாடியது. குறிப்பாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் கரையை கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்கதேசத்திற்கு இடைப்பட்ட பகுதிகளில் மிக அதி தீவிர மோக்கா புயல் கரையை கடந்த நிலையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் மோக்கா புயல் மியான்மா் பகுதியில் இருந்து வடக்கு - வடகிழக்கு நோக்கி நகா்ந்து புயலாக வலுவிழந்தது.
இதையும் படிக்க:கர்நாடக முதலமைச்சா் யாா்? டெல்லி விரையும் தலைவர்கள்!