புதிய உருமாறிய ”மு” வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பி விடும்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை...

மு என அழைக்கப்படும் புதிய உருமாறிய வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பி விடும் அறிகுறிகள் தென்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

புதிய உருமாறிய ”மு” வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பி விடும்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை...

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு இறுதியில் உருவாகி பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அதன் உருமாறிய ஒரு வடிவம் பி.1.621 ஆகும். இது மு என அழைக்கப்படுகிறது. இது கடந்த ஜனவரி மாதம் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் முதன்முதலாக காணப்பட்டது.

அதன்பின்னர் ஆங்காங்கே இந்த வைரஸ் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில் தென் அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய அளவில் வெளிப்பட்டுள்ளது. மேலும், மு என்ற வைரஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஹாங்காங்கிலும் பாதித்துள்ளது.

இந்த வைரசை உன்னிப்பாக கவனித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. இது உலகளாவிய பாதிப்பைக் கொண்டிருந்தாலும்கூட தற்போது இதன் பரவல் விகிதம் புள்ளி ஒரு  சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த வைரஸ், உலக சுகாதார அமைப்பினால் கண்காணிக்கப்படுகிற 5-வது உருமாறிய வைரஸ் என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்த புதிய உருமாறிய வைரசானது, தடுப்பூசிக்கு தப்பிவிடும் அறிகுறிகளை கொண்டிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.