ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடி...!
ஜப்பானில் நடைபெறும் ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிலையில் முன்னதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்தார்.
வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி-7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து ஜப்பான் சென்றடைந்தார். அவருக்கு ஜப்பான் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஹிரோஷிமாவில் உள்ள நட்சத்திர விடுதியில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், குழந்தைகளுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அப்போது, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசிய மிகவும் மகிழ்ச்சியான தருணம் என புலம் பெயர்ந்த இந்தியர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு நட்புறவை மேம்படுத்துவது குறித்து விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஹிரோஷிமாவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பின் பேசிய பிரதமர் மோடி உலகமே பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதத்தால் தவித்து வருவதாக கூறினார்.
இதையும் படிக்க:2000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது...! - ரிசர்வ் வங்கி அறிவிப்பு...!