வாட்ஸ் ஆப் மூலம் பிரச்சாரம்...மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளை மீறிய செயலா? இல்லையா?

வாட்ஸ் ஆப் மூலம் பிரச்சாரம்...மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளை மீறிய செயலா? இல்லையா?

புதுச்சேரி நிரவி தொகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் பொதுக்கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்த  திமுக எம்.எல். ஏ.வுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2021ம் ஆண்டு  புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், நிரவி - டி.ஆர்.பட்டிணம்  தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட என். நாக தியாகராஜன்  5511 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் மனோகரன், திமுக எம்.எல். ஏ. நாக தியாகராஜனின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காலகட்டத்தில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் வாக்காளர்களின் அனுதாபத்தை பெறும் வகையில் பரப்புரை செய்தது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறப்பட்டிருந்தது.

இவ்வாறிருக்க, வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ அனுப்பியது பொதுக்கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்தது முறையாகாது எனவும், மொபைலில் பிரச்சாரம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை எனவும் கூறி, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்.எல். ஏ. மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிக்க } சட்டசபை தேர்தலுக்கு பின், தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், வாட்ஸ் ஆப் மூலம் பிரச்சாரம் செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளை மீறிய செயலா? இல்லையா? என்பது குறித்து வழக்கு விசாரணைக்கு பிறகே தீர்மானிக்க முடியும் எனக் கூறி, தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்.எல். ஏ. தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க }மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா...!