இஸ்லாமியர்கள் மனம் விரும்பியவரை மணக்கலாம் - ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு...
திருமண வயதை நெருங்கிய இஸ்லாமிய பெண்கள் விரும்பியவரை மணக்கலாம் என்று பஞ்சாப் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மத்திய அரசு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது முஸ்லீம் பெண் ஒருவர் 33 வயதுமிக்க இந்து நபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தத் திருமணத்துக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அந்த பெண் சார்பில் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி ஹர்நரேஷ் சிங் கில், ‘‘பருவமெய்திய இஸ்லாமிய பெண்ணுக்கு, அவர் விரும்பும் யாரையும் திருமணம் செய்யும் உரிமை இருக்கிறது. அந்த பெண்ணின் முடிவில் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் உள்ளிட்ட யாருக்கும் தலையிட உரிமை இல்லை.
முஸ்லீம் பெண்ணின் திருமணம் என்பது முஸ்லீம் தனி நபர் சட்டத்துக்கு உட்பட்டது. மனுதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மாறாக செயல்பட்டார் என்பதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தில் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது’’ என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும், அந்த கணவன் மனைவி இருவருக்கும் காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.