மத்திய அமைச்சரவையில் ஜோதிராதித்யா சிந்தியா, வருண் காந்திக்கு வாய்ப்பு?

புதிதாக விரிவாக்கம் செய்யப்படவுள்ள மத்திய அமைச்சரவையில் ஜோதிராதித்யா சிந்தியா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனவால் உள்ளிட்டோர் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவையில் ஜோதிராதித்யா சிந்தியா, வருண் காந்திக்கு வாய்ப்பு?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தற்போது 53 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில், 28 இடங்கள் காலியாக உள்ளன. மத்திய அமைச்சரவையில் தற்போது இடம் பெற்றிருப்பவர்களில் 90 சதவீதம் பேர் ஆண்களாகவும், 53 சதவீதம் பேர் ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். இந்நிலையில், புதிய விரிவாக்கத்தின் போது அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, அமைச்சரவையில் 20 மாற்றங்கள் வரை நடைபெறும் என்றும், சரியாக செயல்படாத 3 அமைச்சர்கள் நீக்கப்படலாம் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிதாக ஜோதிராதித்யா சிந்தியா, வருண் காந்தி, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனவால், பீஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி, மகாராஷ்டிராவின் நாராயண் ரானே, பிரித்தம் கோபிநாத் உள்ளிட்டோரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி ரவி சங்கர் பிரசாத், பியுஷ் கோயல், பிரகாஷ் ஜவ்டேகர் உட்பட சில மூத்த அமைச்சர்களிடம் நான்கு இலாகாக்கள் உள்ள நிலையில், அவர்களது சுமையை குறைக்கும் வகையில் புதியவர்களுக்கு வாய்ப்பு தரப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.