பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற புதுச்சேரி எம்.எல்.ஏக்கள்: அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விரைவில் ஒதுக்கீடு...
புதுச்சேரி அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விரைவில் ஒதுக்கப்படும் எனவும் கூட்டணியில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ-கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-கள் 12 பேர் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி மாநிலத்தின் கடன் தொடர்பாக பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளதாகவும், புதுச்சேரி மாநிலத்திற்கான ஜி.எஸ்.டி நிலுவை தொகையினை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.மேலும் புதுச்சேரியில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்ட கோரிக்கை வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.