ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி - அகதிகளாக வெளியேறும் மக்கள்
ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பின்படி தானே நாட்டின் காபந்து அதிபர் என துணை அதிபர் அம்ருலா சாலே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறி ஓமனில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து அதிபர் மாளிகையை தாலிபான்கள் கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சி அதிகாரம் செய்து வருவதால் உயிருக்கு அஞ்சி அந்நாட்டு மக்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர்.
இதனால் தலைநகர் காபூல் வெறிச்சோடி காணப்படுகிறது. காபூல் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பின்படி அதிபர் ராஜினாமா செய்தாலோ, தப்பியோடினாலோ, உயிரிழந்தாலோ துணை அதிபரே காபந்து அதிபராகிவிடுவார் என்றும் எனவே, சட்டப்படி தாம் தான் காபந்து அதிபர் என துணை அதிபர் அம்ருலா சாலே ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.அனைத்துத் தலைவர்களிடமும் ஆதரவைக் கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒருபோதும் தாலிபான்களுக்குத் தலைவணங்க மாட்டேன் என அவர் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.