76-வது சுதந்திர தினம் தலைவர்கள் வாழ்த்து!

76-வது சுதந்திர தினம் தலைவர்கள் வாழ்த்து!

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

நாடு விடுதலை அடைந்து 76 ஆண்டுகள் நிறைவடைந்து 77 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் , ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த நாம் வறுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும் என்று கூறியுள்ளார். அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம்,  அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்க  இந்த விடுதலை நாளில்  உறுதியேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய விடுதலைக்கு இணையான இயற்கை நமக்கு அளித்த அனைத்து வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும்  பேராசை இல்லாத இந்தியாவை உருவாக்கம்  செய்யவும், போதை, மது, சூது ஆகிய மூன்று சமூகக் கேடுகளையும் முற்றிலுமாக ஒழிக்கவும் இந்த நாளில்  மக்களும் உறுதியேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு வாழ்த்துச் செய்தியில்,  சமூகத்தின் எல்லா மட்டத்திலும் வெறுப்புணர்வை நீக்கி சகிப்புத்தன்மையை வளர்த்தெடுத்து வேற்றுமையில் ஒற்றுமையை  வலுப்படுத்த இந்த சுதந்திரதினத்தில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.

சமத்து மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் வெளியிட்டு வாழ்த்துச் செய்தியில், இந்திய திருநாட்டின் மாண்பையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறப்பையும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் மனதில் தாங்கி, விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களை எண்ணி சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:பதவி உயர்வில் இட ஒதுக்கீடு; தனிச் சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!